You are here
Home > ஆசிரியர் மேசை > கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

கல்வெட்டுகளைக் காப்பாற்றுங்கள்

2011 ஜனவரி மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு வழக்கில் “நினைவுச் சின்னத்தைப் பாதுகாக்க சமஸ்கிருத அறிவு தேவையா?” என்று நல்லதொரு கேள்வியை எழுப்பி இருந்தது.

2009ஆம் ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Tamil Nadu Public Service Commission) கல்வெட்டாய்வாளர், தொல்லியல் அதிகாரி, நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் போன்ற 5 பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்றிருந்தது.

தமிழ் மற்றும் வரலாறு ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலைப் பட்டப் படிப்பையும், கல்வெட்டியலில் பட்டயப் படிப்பையும் | (Diploma in Epigra phy) முடித்திருந்த திரு. நல்லா முகம்மது
என்பவர் தமது விண்ணப்பத்தைச் சமர்ப்பித்திருந்தார்.

விண்ணப்பதாரர் இந்து சமயத்தைச் சார்ந்தவர் இல்லை என்ற காரணம் காட்டி தேர்வாணையம் இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

கல்வெட்டாய்வாளர் அல்லது தொல்லியல் அலுவலர் பதவிக்குச் சமயம் தடையாக இருப்பின் நினைவுச் சின்னப் பாதுகாப்பாளர் (Curator) என்ற பதவிக்காவது தனது விண்ணப்பத்தைப்
பரிசீலனை செய்யுமாறு தேர்வாணையத்தைக் கேட்டுக் கொண்டார் திரு. நல்லா முகம்மது.
அதற்குப் பதிலளித்த தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை திரு. நல்லா முகம்மது தமக்கு சமஸ்கிருதம் தெரியும் என்பதற்கு எந்த ஆவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை என்று  காரணம் கூறி அவரது விண்ணப்பத்தை நிராகரித்தது.

இதைத் தொடர்ந்து அவர் வழக்கு தொடர்ந்த போது தான் சென்னை உயர்நீதிமன்றம் மேற்கண்ட கேள்வியை எழுப்பி உள்ளது.கீழ்க்காணும் கருத்தையும் தெரிவித்தது.

The authorities cannot make it appear that the department of archaeology is a wing of the Hindu Religious and Charitable Endowment (H.R&C.E) Board. There are other religions such as Buddhism, Jainism, Christianity and Islam, which also had their own sway over the political and geographical boundaries in the areas now known as  Tamil Nadu. Therefore, when authorities called for applications for the posts of archaeologists, or epigraphists, they ought not to have made blanket reservation in these posts for candidates belonging to Hindu religion alone.
நீதிமன்றத்தின் மேற்கண்ட கருத்து ஆழமானது; நீண்ட சிந்தைக்குரியது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வெட்டுக்களைப் படிக்க சமஸ்கிருத அறிவு ஏன் தேவைப்படுகிறது? தேவைப்படுவதாக எப்படி தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கருதுகிறது?

தமிழ்நாட்டில் மிகப் பழங்கால கல்வெட்டுகளில் பிராமி எழுத்துக்கள் உள்ளன என்பது உண்மை தான். அந்தப் பிராமி எழுத்துக்கள் கூட வடமொழி எழுத்துக்கள் இல்லை! வடமொழிக்கு ஏது எழுத்து? பிராமி என்பது கூட தமிழ் எழுத்துக்களின் பழைய வடிவம் தான்! வேண்டுமானால் வடபிராமி தென்பிராமி என்று இருவகையாகப் பிரிக்கலாமே ஒழிய இரண்டுமே தமிழ் எழுத்துக்களின் வடிவத்தில் தான் எழுதப்பட்டன. வடமொழிக்கு என்று எழுத்து வடிவமே இல்லாத போது வடமொழி எழுத்துக்களில் கல்வெட்டு வந்திருக்க முடியாது! வட பிராமி என்பது வட இந்தியாவில் வழங்கிய வடதமிழ் (கொச்சைத் தமிழ்). தென்பிராமி என்பது தென்னிந்தியாவில் வழங்கிய தமிழி எனப்படும் எழுத்து வடிவம் தான்! இதைக் கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர்!
மிகப் பிற்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களில் வேண்டுமானால் வடமொழிச் சொற்கள் பல்லவ கிரந்த எழுத்துக்களில் எழுதப்பட்டன என்றாலும் அவை ஒன்றிரண்டு வரிகளில் முடிக்கப்பட்டு மேல் விவரங்கள் முழுமையும் தமிழில் தான் உள்ளன என்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். பல்லவ கிரந்தத்தில் கூட பல தமிழ் எழுத்துக்களின் வடிவம் அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு  வழங்கி வருகிறது.
உண்மைகள் இப்படி இருக்க வடமொழி தெரிந்தால் தான் கல்வெட்டுகளை ஆய்வு செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கூறுவதற்கு அடிப்படை ஏதும் இல்லை. இது தமிழ்நாட்டின் கல்வெட்டுகளை தமிழன் படிக்கக்கூடாது என்பதற்காகவும், இது ஏதோ சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் தொனிக்கிறது! இது இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்படும் மொழி உரிமைக்கு மாறாக தமிழுக்கு எதிராக யாரோ சிலரால் கட்டிவிடப்பட்ட கட்டளையாகத் தெரிகிறது.

தமிழ்நாட்டின் தொடர்பாக உள்ள ஏறத்தாழ 60,000 தமிழ்க் கல்வெட்டுக்களில்  சுமார் 3000 கல்வெட்டுகள் தான் படி எடுத்து கல்வெட்டியல் துறையால் வெளியிடப் பட்டிருக்கின்றன என்றும், எஞ்சிய பெரும்பகுதி மைசூரில் தூங்கிக் கொண்டிருக்கின்றன என்றும் அவற்றை சென்னைக்குக் கொணர்ந்து படி எடுத்து படித்து வெளியிட்டால் தமிழ்நாட்டின் பல உண்மை வரலாறுகள் வெளிவருவதற்கு ஏதுவாகும் என்றும் ஏற்கெனவே நமது தெய்வமுரசு மாத இதழில் தமிழர்களின் தமிழ்த் தாகத்தை வெளியிட்டிருந்தோம்.
அதன்படி சென்ற தமிழக அரசு, மைய அரசுக்குக் கடிதம் எழுதி முயற்சிகள் மேற்கொண்டதையும் மகிழ்வுடன் வெளியிட்டிருந்தோம்.
ஆனால் தொல்லியல் துறையின் மேற்கண்ட கட்டளை தமிழுக்கு எதிராகக் கச்சை கட்டிக்கொண்டு கர்ஜிக்கின்றது! அதுவும் படிப்பவர் அல்ல, பாதுகாப்பவருக்குக் கூட சமஸ்கிருத அறிவு வேண்டும் என்பது புரியாத புதிராக இருக்கிறது.

அதோடு கல்வெட்டியல் துறையைச் சேர்ந்தவர் இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று அத்துறை எடுத்துக் கூறியுள்ளது, இன்னும் வேடிக்கையானது. காரணம் தொல்லியல் துறையை முதன்முதலில் இந்த நாட்டில் தோற்றுவித்தவர்களே ஆங்கிலேய அதிகாரிகள். அவர்கள் அனைவரும் கிறித்துவர்கள்.
கல்வெட்டுக்களைப் படியெடுத்தல் என்பது 19-ஆம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியில் ஆங்கிலேயரால் தோற்றுவிக்கப் பட்டது என்று இத்துறையில் வல்லவரான திரு.ஐ.மகாதேவன் அவர்களால் கூறப்பட்டுள்ளது. 1882-ஆம் ஆண்டில் ராபர்ட் செவல் (Robert Sewell) என்பவர் மதுரை மாவட்டத்தில் உள்ள மாங்குளம் என்ற பகுதியில் முதன்முறையாக கல்வெட்டைப் படியெடுக்கும் பணியைத் தொடங்கினார் என்று அவர் கூறுகிறார். அதைத் தொடர்ந்து அத்துறையில் பணியாற்றிய அதிகாரிகள் பலர் ஆங்கிலேயர்கள்; அதாவது கிறித்துவர்களே. இதற்கெல்லாம் நேர் எதிராக கல்வெட்டு ஆய்வாளர் இந்துவாகத் தான் இருக்க வேண்டும் என்று தொல்லியல் துறை கூறுகிறது. அதனால் தொல்லியல் துறை  சிலர் கைகளில் மாட்டிக் கொண்டுள்ளது என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல வேளை! சென்னை உயர்நீதி மன்றம் சரியான போக்கில் தனது கருத்தை வலியுறுத்தி இருக்கிறது ! நிம்மதிப் பெருமூச்சு விடுவோமாக! தமிழுக்கு நீதி கிடைக்கும் என்று நம்புவோமாக!

Top